எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்தும் லாரியும் தொடர்புடைய விபத்தில் 19 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
இயோ சூ காங்கை நோக்கிச் செல்லும் லென்டோர் அவென்யூ சாலையில் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 2) இவ்விபத்து நேர்ந்தது.
அந்த இளையர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டுபோனதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் படை உறுதிப்படுத்தியது.
விபத்து குறித்து பிற்பகல் 1.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்து தொடர்பான படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. எஸ்பிஎஸ் பேருந்தின் பின்னால் மூன்று போக்குவரத்துக் காவல்துறை மோட்டார்சைக்கிள்கள் நின்றிருந்ததை அவை காட்டின.
அந்த மூன்று தடச் சாலையின் இடது தடத்தில் அப்பேருந்து நிறுத்தப்பட்டிருந்ததும் அதன் முன்புற வலது முகப்புக் கண்ணாடி சேதமடைந்திருந்ததும் அப்படங்கள் மூலம் தெரியவந்தது.
சிவப்பு நிற மோட்டார்சைக்கிள் ஒன்று பேருந்தின் முன்புறம் கிடந்தது. சாலையின் நடுத்தடத்தில் சிறிய நீலக்கூடாரம் போடப்பட்டு, அதனருகில் யாரும் செல்லாதவாறு தடுப்பு போடப்பட்டிருந்தது.
லாரியை ஓட்டிச் சென்ற 35 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் தொடர்புடைய பேருந்துச் சேவை 852ல் பயணம் செய்தவர்களில் எவருக்கும் காயமில்லை என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனப் பேச்சாளர் கூறினார்.