நைரோபி: கென்யா தலைநகர் நைரோபியில் பிப்ரவரி 2ஆம் தேதி நிகழ்ந்த எரிவாயு வெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
நைரோபியின் எம்பாகாசி அக்கம்பக்க குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவுக்கு சற்று முன்பு வெடிப்பு நிகழ்ந்தது. அங்கு எரிவாயு நிரப்பும் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இந்த வெடிப்பில் நிறுவனத்தின் கட்டடம் சேதமடைந்ததாக ‘எக்ஸ்’ ஊடகத்தில் வெளியிட்ட தகவலில் அரசாங்கப் பேச்சாளர் ஐசக் முவாரா தெரிவித்தார்.
எரிவாயு வெடிப்பில் மூண்ட தீ அக்கம்பக்க வட்டாரங்களுக்கும் வேகமாகப் பரவியதால் ஜவுளி, ஆடை கிடங்குகள் நாசமாயின. பல வாகனங்களுக்கும் வர்த்தக, குடியிருப்பு சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதுவரை வெடிப்பில் கென்ய நாட்டவர்கள் இருவர் இறந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.
ஒன்பது மணி நேரம் போராடி தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.