பிரிட்டிஷ் நடிகர் தேவ் பட்டேல் முதல்முறையாக இயக்கியுள்ள ‘மங்கி மேன்’ எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் சிங்கப்பூர் நடிகர் மதியழகன், 59, சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆஸ்கார் விருது வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த சிறப்புக்கு உரியவர் தேவ் பட்டேல்.
கடந்த காலத்தில் நடந்த தவற்றுக்குப் பழிவாங்கும் கதாநாயகனாக ‘கிட்’ எனும் பாத்திரத்தில் இப்படத்தில் பட்டேல் நடித்துள்ளார்.
சண்டைக் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான இந்தப் படத்தில் மதியழகன் ஓர் ஆயுத விற்பனையாளராக நடித்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் சிங்கப்பூர்த் தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றில் நடித்துப் புகழ்பெற்றுள்ள அவர், ஏப்ரல் 7ஆம் தேதி, ‘மங்கி மேன்’ திரைப்படத்தில் தமது நடிப்பு குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
பொன்னான இந்த வாய்ப்பைத் தமக்கு வழங்கிய தேவ் பட்டேலுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பட்டேலுடன் இணைந்து பணியாற்றியது தமக்குக் கிடைத்த கௌரவம் என்றும் அதன்மூலம் அதிகம் கற்றுக்கொண்டதாகவும் மதியழகன் கூறினார்.
‘மங்கி மேன்’ திரைப்படத்தில் தாம் தோன்றும் காட்சியை மதியழகன் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“தேவ் பட்டேல் மற்றும் அவரது குழுவின் கண்ணோட்டம், அர்ப்பணிப்பு, கதை சொல்லும் முறை ஆகியவை எனக்குள் கல்வெட்டாய்ப் பதிந்துள்ளன.
“மங்கி மேன் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை அளவிலா மகிழ்ச்சி அளித்த ஒரு கற்றல், வளர்ச்சிப் பயணம் என்றே கருதுகிறேன்,” என்கிறார் திரு மதியழகன்.
11 வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், 1988ஆம் ஆண்டு தம் 24ஆம் வயதில் முதன்முதலாக உள்ளூர்த் தொலைக்காட்சியில் சந்தியா என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற மதியழகன், நான்கு முறை பிரதான விழா விருதைப் பெற்றார். 2006ல் ஆசியத் தொலைக்காட்சி விருதையும் தட்டிச் சென்றார்.
2001ல் பூவெல்லாம் உன் வாசம், 2015ல் காஞ்சனா-2, ஜிப்பா ஜிமிக்கி, பறந்து செல்ல வா, பெங்குவின் எனத் தமிழ்த் திரைப்படங்களிலும் தோன்றினார்.
“உள்ளூர்த் தமிழ்க் கலையுலகிற்குள் நுழைவது எளிது என்றாலும் அடுத்த நிலைக்குச் செல்வது அவரவர் கையில்தான் இருக்கிறது. ஒரே இடத்தில் தேங்கி நில்லாமல் பல இடங்களை நாடிச் சென்றேன். ஆங்கிலத்திலும் நடித்தேன். ஹாலிவுட் வாய்ப்பு கிட்டுவதற்கு இது வழிவகுத்தது,” என்கிறார் மதியழகன்.
‘மங்கி மேன்’ படத்தில் ஓரிரு காட்சிகளில் மட்டும் நடித்திருந்த நிலையில், படத்தயாரிப்பின் பல்வேறு கட்டங்களைக் கடந்து அப்படத்தில் தாம் இடம்பெற்ற காட்சி திரை ஏறியது குறித்துத் தாம் நன்றியுடன் இருப்பதாகவும் மதியழகன் கூறினார்.
தாம் நடித்த காட்சிக்கான படப்பிடிப்பு மூன்று நாள் நீடித்தபோதும் கொவிட்-19 கிருமிப் பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அது தொடர்பான பணிகள் நிறைவடைய ஒரு மாதம் ஆனதாக மதியழகன் கூறினார்.