தரமிக்க காணொளிகளை உருவாக்க உயர் ரக கருவிகளோ தயாரிப்புக் கூடமோ தேவையில்லை, புத்தாக்கம் இருந்தால் போதும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இருவர் இறங்கியுள்ளனர்.
சுரேஷ் சுபாஷ், 39, மற்றும் வசந்தகுமார் அன்பழகன், 24, நாடகங்கள்வழி ஒருவருக்கொருவர் அறிமுகமாகினர். அதன்வழி, சென்ற அக்டோபரில் பிறந்தது @nightsky_creatives எனும் இன்ஸ்டகிராம் தளம்.
முப்பது வினாடிகளிலிருந்து ஒன்றரை நிமிடம் வரையிலான குறுங்காணொளிகளையும் குறும்படங்களையும் அவர்கள் தயாரித்து, தங்கள் தளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
உயர் ரக புகைப்படக் கருவிகள் இல்லாததால் எழும் கட்டுப்பாடுகளை இவர்களது புத்தாக்கம் தகர்த்தெறிகிறது.
இருவரது வேறுபட்ட அனுபவங்களின் சங்கமம் ஒரு தனி பாணியைச் சார்ந்த காணொளிகளுக்கு வழிவகுத்துள்ளது.
சுரேஷ் நாடகம், ஊடகத் துறைகளில் ஊறியவர். வர்த்தக ஆலோசகராகவும் சுயதொழில் புரிகிறார்.
வசந்தகுமார் ஒரு வரைபட வடிவமைப்பாளர். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கலை, வடிவமைப்பு ஊடகப் பள்ளியில் மாணவராகவும் படிக்கிறார்.
தனித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இவர்களது 30 வினாடிக் காணொளியின் பின்னணியில்கூட பல வாரத் திட்டமிடுதல் உண்டு.
அனைத்துலக ரீதியாக கலையுலகில் சிங்கப்பூர்க் கொடியை உயர பறக்கவிடும் நோக்கத்தில் மலேசிய கலைஞர்களையும் தம் காணொளிகளில் ஈடுபடுத்துகின்றனர்.
“நாங்கள் புகழுக்காகவோ மக்களின் ‘லைக்ஸ்’காகவோ இதைச் செய்யவில்லை. பிறருக்கு நம்பிக்கையூட்டுவதே எங்கள் நோக்கம்,” என்கிறார் சுரேஷ்.