முதியோர் பெரும்பாலும் விரும்பும் பழைய பாடல் நிகழ்ச்சிகளுக்கு இளையர்களின் கைகள், பாசமிகு குடும்பச் சூழலில் இணைகின்றன.
உள்ளூர் நடிகரும் பாடகருமான செல்வராஜூ பிரகாசம், 66, ‘மலரும் நினைவுகள்’ என்ற பாடல் நிகழ்ச்சியை தம் குடும்பத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினருடன் சேர்ந்து ஏற்பாடு செய்து வருகிறார்.
நவராத்திரி போன்ற திருவிழாக்கள், தேர் ஊர்வல வரவேற்புப் பந்தல் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் கலைநிகழ்ச்சிகளைப் பல்லாண்டுகளாக ஏற்பாடு செய்துவந்த திரு செல்வராஜூ, நுழைவுச் சீட்டுகள் தேவைப்படும் இந்த மேடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்தியாவிலிருந்து ஓர் இசைக்குழு இந்நிகழ்ச்சிக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக திரு செல்வராஜூ குறிப்பிட்டார்.
“வழக்கமான பகுதிநேர சிங்கப்பூர், மலேசிய இசைக்குழுக்களுக்குப் பதிலாக முழு நேரமாக பணியாற்றி, நல்ல தரமுள்ள இசைக்கலைஞர்களுடன் மேடையேறுவது உள்ளூர்ப் பாடகர்களுக்கும் புதிய அனுபவமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சி பிப்ரவரி 25ஆம் தேதி கிரேத்தா ஆயர் அரங்கில் நடைபெற உள்ளது.
1950, 1960களில் வெளிவந்த பாடல்களைக் கேட்டு தற்போது வளர்ந்து முதியவர்களாக உள்ள நிலையில் அவர்களைப் பழைய நினைவலைகளில் உல்லாசமாய்த் திளைக்க வைப்பது இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்றார் திரு செல்வராஜூ.
பழம்பெரும் பாடகர் சி.எஸ் ஜெயராமனைப் போன்ற அதே குரலில் பாடக்கூடிய பிரிட்டோ என்பவர் நிகழ்ச்சியில் இணையவிருக்கிறார். அத்துடன், பழம்பெரும் பாடகர் கண்டசாலாவைப் போலப் பாடும் உள்ளூர்ப் பாடகர் கிருஷ்ணசாமி இந்நிகழ்ச்சியில் இணைகிறார். டிஎம்எஸ் மற்றும் சீர்காழி கோவிந்தஞ்சன் பாடல்களை தமிழகப் பாடகர் முகேஷ், உள்ளூர்ப் பாடகர்கள் நல்லையா, சுந்தமூர்த்தி, கமலநாதன் ஆகியோர் பாடுகின்றனர்.
“1970களிலும் அதற்குப் பிறகும் வெளிவந்த இளையராஜா, எஸ் பி பாலசுப்ரமண்யம் போன்றோரின் பாடல்களை இந்நிகழ்ச்சியில் சேர்க்கவில்லை. கறுப்பு வெள்ளை திரைப்படப் பாடல்களை மட்டும் விரும்புவோருக்காக முத்தான பாடல்களைத் தேர்வுசெய்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இசையின்மீது தம் மாமனார் கொண்டுள்ள ஆர்வத்தை ஆதரிக்க விரும்பியே இந்நிகழ்ச்சியை நடத்த கைகொடுத்து அதனைப் பிரபலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக திரு செல்வராஜின் மருமகள் வைஷ்ணவி ஸ்ரீனிவாசன், 34, தெரிவித்தார். வீட்டிலுள்ள முதியோருடன் இணைந்து அவர்களை மகிழ்வூட்டுவதற்கு இந்நிகழ்ச்சி அருமையான வாய்ப்பு என்று அவர் கூறினார்.
“என் தலைமுறையினருக்கு இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் போன்றோரின் பாடல்கள் எப்படி இளமைப் பருவத்தை நினைவூட்டுகிறதோ, அதுபோலவே முந்திய தலைமுறையினருக்கு இந்தப் பழைய பாடல்கள் அவர்களது இளமைக் காலத்தை நினைவூட்டும்,” என்றார் திருவாட்டி வைஷ்ணவி.
நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை ஜோதி ஸ்டோர்ஸ் புஷ்ப கடையிலிருந்து பெறலாம் அல்லது 9237 5343 என்ற எண்ணை அழைக்கலாம்.