இளையர்களுக்கிடையே தமிழ்மொழி ஆர்வத்தை அதிகரிக்கவும் இருமொழிக் கற்றலை ஊக்குவிக்கவும் புதிதாக ‘டிக்டாக் தமிழா’ பாடல் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்காலத்தில் இளையர்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கும் ராப் இசை வகை பாணியில் இளையர்கள் தமிழ்மொழியில் ராப் செய்து தங்களின் டிக்டாக் தளத்தில் பாடலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
‘எல்லோரும் கொண்டாடுவோம்’ எனும் கருப்பொருளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் பங்கேற்பவர்கள் நாட்டின் சிறப்புகள், சாதனைகள், தமிழ்மொழியின் சிறப்பு, நல்லிணக்கம், விடாமுயற்சி, நட்பு, குடும்ப உறவு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை வெளிப்படுத்தும் வகையில் ராப் பாடலை அமைக்க வேண்டும். 13 முதல் 30 வயதுள்ள சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
மக்கள் கழக நற்பணிப் பேரவை ஏற்பாடு செய்துள்ள இப்போட்டிக்கு இருமொழிக் கல்விக்கான லீ குவான் இயூ நிதி ஆதரவு அளித்துள்ளது. ராப் பாடல் ஒரு நிமிடத்துக்குள்ளும், பாரம்பரிய உடையில் படைக்கப்பட வேண்டும். மேலும், அதை ஒருவர் அல்லது இருவராகவும் பாடி #tiktokthamizhanarpani23 என்ற பதிவோடு டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு ராப் பாடலை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.
ராப் பாடல் புத்தாக்கத்திறன், மொழிப் பயன்பாடு, படைக்கும் பாணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்யப்படும். அத்துடன், 90 விழுக்காடு நடுவர்களின் மதிப்பெண்களும், 10 விழுக்காடு வாக்களிப்பு என்ற முறையில் மதிப்பீடும் வழங்கப்படும். இதற்கு முன்னர் தமிழ்மொழி ஆற்றலை அதிகரிக்கும் விதத்தில் மக்கள் கழக நற்பணிப் பேரவை சொற்சிலம்பம், சொற்களம் முதலிய போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது.
நற்பணிப் பேரவையின் துணைச் செயலாளரான மீனாட்சி, “தமிழ்மொழியை வாழும் மொழியாக வைத்திருக்க நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். அவற்றில் ஒன்று இந்த ராப் பாடல் போட்டி. நவீன பாணியில் அமைக்கப்பட்ட இப்போட்டியில் கலந்துகொள்ள இளையர்கள் பலர் முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார்.
போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி இரவு மணி 11.59க்குள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScTPbVJOK1rRPy_Dbv9eCsMoQusnds… என்ற இணையத்தளம் மூலம் தங்கள் விருப்பத்தை பதிவு செய்து ராப் பாடலை டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். வெற்றியாளருக்கு $1,000 வரையிலான பற்றுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்படும்.