நிதி இலக்குகளைச் சரிவர நிறைவேற்ற நிதி தொடர்பான தவறுகளைத் தவிர்ப்பது அவசியம்.
தலைமுறை மாற்றத்தைத் தொடர்ந்து, வாழ்க்கை முறையும் மாறுபடுகிறது. வருமானம் பெருகுவதைப்போலவே, செலவுகளும் அதிகரிக்கின்றன. அப்படி இருக்கையில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பொழுதுபோக்குகளுக்கும் செலவு செய்யக்கூடாது என்றில்லை. அதனைச் சற்றே சிந்தித்துச் செய்வது அவசியம் என்கிறார் நிதி ஆலோசகர் ஹபீடா ஷா.
பொதுவாக இளையர்கள் செய்யும் முக்கியத் தவறு, அவசரகாலத் தேவைக்கான சேமிப்பு இல்லாமல் இருப்பது. காப்பீட்டுத் திட்டம், பங்குச் சந்தை போன்ற முதலீடுகள் இருந்தாலும், ‘லிக்குவிடிட்டி’ எனப்படும் நினைத்த மாத்திரத்தில் பணமாக்கும் வகையில், வைப்புநிதியாகவோ, சந்தை விலையைவிடக் குறையாத வகையிலோ சேமித்து வைப்பது அவசியம் என்கிறார் நிதி ஆலோசகர் தமிழ் முரசு.
குறைந்தபட்சம் ஒருவரது 3 முதல் 6 மாதத்திற்கான செலவை அவசரகால நிதியாக வைத்திருக்காமல் வேறு எந்த முதலீடுகளையும் மேற்கொள்வது தவறு என வலியுறுத்துகிறார் நிதி ஆலோசகர் ம. சசிகுமார்.
அடுத்த முக்கியத் தவறு, ‘கிரெடிட் கார்ட்’ எனும் கடன்பற்று அட்டை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது. இளையர்கள் குறிப்பாக ‘கேஷ்பேக் கார்ட்’, ‘ஸ்டோர் கார்ட்’, ‘ரிவார்ட்ஸ் கார்ட்’ என கொட்டிக்கிடக்கும் விருப்பங்களில் இருந்து, தேவைக்கேற்ற வகையிலான அட்டையைத் தேர்ந்தெடுத்து, அறிவார்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நிதி நிபுணர்கள்.
கடன்பற்று அட்டைகள், ஈர்க்கும் சலுகைகள் பலவற்றை வழங்குகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டியது, ‘ஒரு பொருளைக் கடன்பற்று அட்டையின் மூலம் வாங்கினாலும், அந்தப் பணத்தை திரும்பிச் செலுத்தும் நிதி நம்மிடம் இருக்கிறதா என ஆராய வேண்டும். ஒருவேளை கையிருப்பிலிருந்து அப்பொருளை வாங்கினாலும், அதனால் நெருக்கடி நிலையில் இருக்கிறோமா என்பதைப் பார்ப்பது முக்கியம் என்கிறார் தமிழ் முரசு.
அவ்வாறு சிந்திக்காமல் கண்ணை மூடிக்கொண்டு கடன்பற்று அட்டை மூலம் பொருள்களை வாங்கிக் குவிப்பது மிகவும் தவறு என்கிறார் அவர்.
அடுத்த முக்கியத் தவறாக கருதப்படுவது கடன் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது என்கிறார் ஹபீடா. நிலையிலிருந்து உயர்த்தும், மூலதனத்தை அதிகரிக்கும் வகையிலான சில கடன்கள் நல்ல கடன்களாகக் கருதப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, வீடு வாங்குவதற்கான வங்கிக்கடன், உயர்கல்விக் கடன் ஆகியவை அவசியமானவை என்பதோடு உயர்வைத் தருபவை. மறுபுறம், வாகனம் வாங்குவது போன்றவற்றுக்காக கடன் வாங்குவது சிறப்பன்று என்கிறார் தமிழ் முரசு.
குறிப்பாக சிங்கப்பூரில் வாகனம் வாங்குவதோடு நில்லாமல், அதற்கான வாகன உரிமைச் சான்றிதழ் தொடங்கி, எரிபொருள், வண்டி நிறுத்தச் சீட்டு, மின்னியல் சாலைக் கட்டணம், வாகனப் பராமரிப்பு என இன்ன பிற செலவுகளுக்கும் வழிவகுக்கிறது. அவற்றை ஆராய்ந்து, தேவையின் அளவைப் பொறுத்து அந்த முடிவை எடுக்க வேண்டும் என்கிறார் அவர்.
இளையர்கள் மேற்கொள்ளும் மற்றொரு முக்கியத் தவறு ‘ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட்’ எனும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் அழுத்தத்தினால் மேற்கொள்ளும் ஆடம்பரச் செலவினங்கள் என்கிறார் நிதி ஆலோசகர் ம. சசிகுமார். இளமையில் சுய கட்டுப்பாடு கடினமாக இருந்தாலும், எதிர்காலத்தில் பலவகையில் அது உதவும் என்கிறார் அவர்.
மேலும், உலகை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல், பலரது கருத்துகளைக் கேட்டு செயல்படுத்துவது அவசியம் என்கிறார் அவர்.
நிதி ஆலோசகர் அர்ஷத் அப்துல் ஜலீல், அவரவர் நிதி நிலைமை குறித்து சுய அலசல் செய்யாமல் இருப்பது தவறு என்கிறார். அவ்வப்போது சிறிது நேரம் ஒதுக்கி, கடந்து போனவற்றை மறுஆய்வு செய்வது, எதிர்காலத்தில் ஆழமான புரிதலோடு முடிவெடுக்க உதவும் என்கிறார்.