பணத்தின் மதிப்பைச் சரிவர புரிந்துகொண்டு, விவேகமான செலவு, சேமிப்பு, முதலீட்டுத் திட்டத்தை வகுத்து, நிதி இலக்கோடு பயணம் செய்வது இன்றைய முக்கியத் தேவை என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து.
சேமிக்க வேண்டும் எனும் மனப்பான்மை பலருக்கு இருந்தாலும், அதுகுறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. குறிப்பாக, இளையர்களுக்கு சேமிப்பு முதலீடு குறித்த புரிந்துணர்வு இருப்பது அவசியம். சேமிப்பு வேறு, முதலீடு வேறு எனும் புரிதல் அவசியம் என்கிறார் நிதி ஆலோசகர் ஹபிடா ஷா.
பணத்தை ஒரு சில குறுகிய கால நிதி இலக்குகளுக்காக சேர்த்து வைப்பது சேமிப்பு. இதுவே பணத்தை எதிர்காலத் தேவைக்காகப் பெருக்குவது முதலீடு என்கிறார் அவர்.
சேமிப்பில் பொதுவாக சாதாரண வட்டி, கூட்டு வட்டி மூலம் சேமிக்கும் பணம் குறிப்பிட்ட அளவு மட்டுமே லாபத்தைக் கொடுக்கும். ஆனாலும், வங்கிக் கணக்கு, வைப்பு நிதி, நிதிப் பத்திரங்கள் ஆகியவற்றில் சேமிப்பது, தேவையான நேரத்தில் பணத்தைத் திரும்பப் பெற ஏதுவாக இருக்கும்.
அவசரத் தேவை, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் திருமணம், வீடு வாங்க முன்பணம் செலுத்துதல் போன்றவற்றுக்காக சேமிக்க வேண்டி இருந்தால், இவ்வகைச் சேமிப்புகள் சரியான தேர்வு என்கிறார் ஏஐஏ நிறுவனத்தில் நிதி ஆலோசகராகப் பணியாற்றும் அர்ஷத் அப்துல் ஜலீல்.
பொதுவாக, இளையர்கள் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள ‘வாராந்தர சேமிப்புத் திட்டம்’ எனும் சுயசேமிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம் என்கிறார் ஹபிடா.
அதாவது, முதல் நாளில் $1, இரண்டாம் நாளில் $2, மூன்றாம் நாளில் $3 என்று தொடங்கி, அப்படியே பெருக்கிக்கொள்ளலாம்.
இதன்மூலம் ஏற்படும் உந்துதலால், அதனை 365 நாள் திட்டமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
இளையர்கள் தங்கள் ‘பிளேனர்’ நாட்குறிப்பேட்டிலோ, கணினியின் ‘எக்ஸல்’ மென்பொருள் கொண்டோ அதனைக் கண்காணிக்கலாம். மேலும் சேமிக்கும் எண்ணத்தை அது உருவாக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.
இத்தகைய வங்கிச் சேமிப்புகள் மட்டுமே அபாயம் அற்றவை என எண்ணும் பலர், ஒரு முக்கியச் செய்தியை மறந்து விடுகிறார்கள்.
அது, பணவீக்கம். எடுத்துக்காட்டாக, இன்று ஒருவர் சேமித்திருக்கும் நூறாயிரம் வெள்ளியின் மதிப்பு, அடுத்த ஐந்து அல்லது பத்தாண்டுகளில் 95 ஆயிரமாகக் குறையலாம். ஆனால், அந்தப் பணம் மூலம் வரும் லாபம் ஐந்தாயிரத்துக்கும் குறைவாகவே இருக்கும். ஒருவகையில் பார்த்தால் இது இழப்புத்தான்.
எனவே, பணத்தை பல பரிமாணங்களில் பெருக்கும் வகையில் சேமிப்புகளும் முதலீடுகளும் இருக்க வேண்டும் என்கிறார் நிதி நிபுணர் சசிகுமார்.
முதலீடுகளை குறைந்த அளவில் தொடங்குவது அவசியம். முதலீடுகளை பல்வகைப்படுத்துவதும் அவசியம் என்கிறார் ஹபிடா. குறிப்பாக, இடர் மேலாண்மை பற்றி அறிந்தபின் களமிறங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
பணவீக்கம் தொடங்கி, வட்டி விகிதங்கள், நாணயச் செலாவணி குறித்த புள்ளி விவரங்களை சிங்கப்பூர் நாணய ஆணைய இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்கிறார் அவர்.
முதலீட்டில் இறங்க விரும்புவோர் முதலில் பங்கு வணிகத்திலும் சமநல முதலீட்டிலும் (மியூச்சுவல் ஃபண்ட்) இறங்கலாம்.
பங்கு வணிகத்தில் ‘டிவிடண்ட் ஃபண்ட்’ எனும் ஈவுத்தொகையை லாபமாகக் கொடுக்கும் வகையில் முதலீடுகளை அமைத்துக் கொள்ளலாம் என்கிறார் நிதி ஆலோசகர் தமிழ் முரசு.
மேலும், அவ்வப்போது சந்தையில் பிரபலமாக இருக்கும் தொழில்நுட்பங்களையும், நிறுவனங்களையும் தேடித் தேடி முதலீடு செய்வது அவசியம் என்றும் அவர் சொல்கிறார்.
குறிப்பாக, சிங்கப்பூரில் மின்சார வாகன நிறுவனங்கள் வளர்ச்சியடையும் வாய்ப்புள்ளதால் அவற்றில் முதலிடுவது குறித்து ஆலோசிக்கலாம் என்கிறார் தனியார் நிறுவன நிதி ஆலோசகர் சசிகுமார்.
சூரிய மின்னாற்றல், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் சார்ந்தவற்றிலும் முதலீடு செய்யலாம் என்கிறார் தமிழ் முரசு.
அத்துடன், சேமிப்பு, முதலீடு இரண்டையும் தாண்டி, நிலையான மறைமுக வருமானம் (Passive Income) ஈட்டும் வகையில் ஏதேனும் ஒரு கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
முதலீட்டைப் பொறுத்தவரை, முடிவுகளைச் சரியான நேரத்தில், சரியான முறையில் செயல்படுத்தினால் மட்டுமே சிறப்பான லாபத்தைப் பெற முடியும். அதற்கு ஆழ்ந்த விழிப்புணர்வும், உரிய நிபுணர்களின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது உதவிபுரியும்.