சிங்கப்பூரில் ஓராண்டுக்கு மேல் இயங்கி வருகிறது அனைத்துலக சிலம்பப் பயிலகம். 4 வயதிலிருந்து 33 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பலர் இந்தப் பயிலகத்தில் சிலம்பக் கலையைப் பயின்று வருகிறார்கள். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தேறிய ஆசிய சிலம்ப வெற்றியாளர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து மொத்தம் 30 பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளார்கள்.
“சிலம்பம் என்ற ஒரு பாரம்பரிய கலை, சிங்கப்பூரில் சிறப்பிக்கப்படுவது பொருட்டு நம் குழு வெளிநாட்டில் போட்டியிட்டு, அனைத்துலக அளவில் பல பதக்கங்கள் பெற்றது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது,” என்றார் அனைத்துலக சிலம்பப் பயிலகத்தின் மாஸ்டர் கணேசன்.
இந்த சிலம்பம் பயிற்சிகள் உடல் வலிமை, சுறுசுறுப்பு, நெகிழ்வுத்தன்மை, பலம், உடல் ஒருங்கிணைப்பு, வேகம் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.
“சிறுவர்கள் சிலம்பம் கற்றுக் கொள்வதில் பல நன்மைகள் உள்ளன. இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறுவர்களை ஆரோக்கியமாக்கும். அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை ஆரோக்கியமான முறையில் போக்க இந்த விளையாட்டு மிகவும் உதவுகிறது. மேலும், சிலம்பத்தில் அடங்கியுள்ள நமது பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிவார்கள்,” என்றார் கணேசன்.
இந்தியாவில் சிலம்பப் பயிற்சி பெற்று சிங்கப்பூரில் தற்போது வசிக்கும் கணேசனிடம் ஆர்வமுள்ள பல மாணவர்கள் சிலம்பக் கலையைக் கற்று வருகிறார்கள்.
“சிலம்பத்தைச் சிறு பிள்ளைகள் சிரமம் இல்லாமல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம். அவர்களுக்குச் சுவாரசியமான முறையில் கற்றுக் கொடுத்தால், அந்தக் கலையின் மீது ஆர்வம் அதிகம் ஏற்படும் என்று திடமாக நம்புகிறேன்,” என்றார் அவர்.
கணேசனின் தீவிர பயிற்சியின் மூலம் வெற்றி கண்ட மாணவர்களில் ஒருவர் ராஜி. 34 வயதான அவர், தனது மூன்று பிள்ளைகளுடன் இணைந்து கணேசனிடம் சிலம்பப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
“என் மூன்று பிள்ளைகள் முதலில் மாஸ்டரிடம் சிலம்பம் கற்று வந்தார்கள். அவரின் கற்றல் முறை என்னைப் பெரிதும் ஈர்த்ததால் நானும் சிலம்பக்கலையைப் பயிலத் தொடங்கினேன்,” என்றார் ராஜி.
ஆசிய சிலம்ப வெற்றியாளர் போட்டியில் ராஜி இரண்டு வெள்ளிப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளார்.
“உடல் அளவில் நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். மாஸ்டரும் என் சக உறுப்பினர்களும் அளிக்கும் ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிலம்பம் ஒரு கலை மட்டுமல்ல, நம் பாரம்பரிய மைல்கல்களில் ஒன்றாகும். அதை நாம் கணிசமாகக் காத்துப் பின்பற்றுவதால் அடுத்து வரும் தலைமுறைகள் அதை அடையாளம் காண்பார்கள்,” என்றார் ராஜி.
“வருங்கால சிங்கப்பூரில் சிலம்பம் ஒரு கலையாக அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அளவில்லா கனவுகள் எனக்குள்ளது. அந்தக் கனவைக் என்னுடன் பகிரும் என் மனைவி, அதற்காக பாடுபடும் பிள்ளைகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் பெற்றோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்,” என்றார் கணேசன்.
உடல் அசைவுகள், கம்பு வீச்சுகளிலிருந்து எழும் தாள சத்தங்களைக் கடந்தது சிலம்பம். கலாசாரம், பாரம்பரியம், ஒழுக்கம் போன்ற பண்புகள் ஆழமாகப் பதிந்துள்ள இந்தக் கலையைக் கவனமாகப் பேணிக் காத்து வருகின்றனர் அனைத்துலக சிலம்பப் பயிலகம்.