புதுடெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்புப் பணிகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் (சி.ஐ.எஸ்.எஃப்) ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நிகழ்ந்த நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை அடுத்து மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் பழைய, புதிய கட்டடங்களுக்கு இனி விமான நிலையங்களுக்கு அளிக்கப்படுவது போன்ற பாதுகாப்பு அளிக்கப்படும். அதன்படி இனி நாடாளுமன்றத்திற்கு வரும் எம்.பி.க்கள் அனைவருக்கும் உடல் முழுவதும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொள்ளப்படும். மேலும் அவர்கள் அணிந்துள்ள காலணிகள், இடுப்புப்பட்டை உள்ளிட்ட உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என மத்திய உள்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்து தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக் குழு, அதன் உறுப்பினர்களின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மிக விரைவில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதேபோல் மத்திய அரசின் பல்வேறு அமைச்சு அலுவலகங்களுக்கு தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கெனவே நாடாளுமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு வழங்கும் குழுவுடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இணைந்து புதிய பாதுகாப்பு நடைமுறை குறித்து கலந்தாலோசிக்கவும் ஆய்வு நடத்தவும் உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.