புதுடெல்லி: இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவைப்போல மாறும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (டிசம்பர் 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடிக்கு மேற்பட்ட சாலைக் குத்தகைகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்காக நடப்பில் இருந்த கொள்கைகள் திருத்தப்பட்டுள்ளன,” என்றார்.
“சாலை அமைப்பு தொடர்பாக எந்த ஓர் ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு என்னை நேரில் சந்திக்கத் தேவையில்லை.
“நாங்கள் முடிவெடுப்பதில் வெளிப்படையாகவும் விரைவாகவும் இருக்கிறோம். குறித்த நேரத்திற்குள் மிகவும் தரமாக வேலையை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.
“தரமான வேலைகளை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அதனால்தான் ஏழு உலக சாதனைகளைச் செய்ய முடிந்துள்ளது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சின் மகத்தான சாதனை இது.
“அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் சாலைகள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
“அந்த ஐந்தாண்டுகளில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக மாற்றமடையும். குறைந்த அளவு மாசுபாட்டுடன் போக்குவரத்து மேம்பாடு காணும்.
“மின்சாரப் பேருந்துகளை அதிக நகரங்களில் அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“இதுதவிர, புதிய எல்லைப்புறச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க வசதியாக 30 சாலைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன,” என்றார் கட்காரி.