இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருந்த ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புப் பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கி இருந்தது. அந்த சிறப்புப் பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கிய இந்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இதற்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 16 நாள்கள் நடைபெற்றது.
வழக்கு விசாரணைக்குப்பின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வு திங்கட்கிழமை தீர்ப்பை வெளியிட்டது. இதில், மூன்று தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கினர்.
தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பையும், நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் ஒரு தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரண்டு தீர்ப்புகளும் தமக்கு ஏற்புடையவை என்று கூறியுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது மாநிலங்கள் யூனியன் பிரதேச அதிகாரத்தின்கீழ் வந்துவிடும். மாநிலத்தின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவர் அதிகாரத்தை பயன்படுத்துவது மறுஆய்வுக்கு உட்பட்டதல்ல,” என்று தெரிவித்தார்.
மேலும், போர்ச் சூழலைக் கட்டுப்படுத்த இடைக்கால தீர்வாகத்தான் சட்டப் பிரிவு 370 உள்ளது. அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே செல்லுபடியாகும். இதன்மூலம், சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது என்றார்.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்த பிறகும், சட்டப் பிரிவு 370 குறித்த அறிவிப்பை வெளிடுவதற்கான அதிகாரம் அதிபருக்கு உள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே சட்டப் பிரிவு 370ஐ அதிபர் ரத்து செய்ய முடியும் என்று விளக்கினார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் முடிவு வருத்தம் தந்தாலும் தாங்கள் மனந்தளரவில்லை என்றார் முன்னாள் ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா.
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.