அயோத்தி: உத்திரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி மாதம் திறப்புவிழா காண உள்ளது. இக்கோயிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 15 புதிய ஹோட்டல்களை கட்டவும் 8 டவுன்ஷிப்களை உருவாக்கவும் மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிதின் ரமேஷ் கூறும்போது, “அயோத்தியில் 23 பெரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் தனியார் துறையினர் ரூ.4,500 கோடியை முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சில திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். பெரிய திட்டங்கள் பல்வேறு கட்டங்களாக முடிக்கப்படும்,” என்றார்.
இதுபோல, ஹோட்டல்கள், ரிசார்ட்களை கட்டுவதற்காக உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது பிறமாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் 1,450 சதுர மீட்டர் முதல் 29,000 சதுர மீட்டர் வரையிலான நிலங்களை வாங்கி உள்ளன.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில், கோயிலின் கருவறைப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.