உத்தரப் பிரதேசம்: திருமண ஊர்வலம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் திருமண விருந்தில் கலந்துகொண்ட அறுவரால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில், குற்றம் புரிந்த ஆறு பேரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு நடந்ததாகவும் திருமண ஊர்வலம் கேத்தாசரை நகரத்தை வந்தடைந்த பிறகு, அஜய் பிரஜபதி, அவரின் சகோதரர் அங்கித் இருவரையும் அதே விழாவில் கலந்துகொண்ட ஆறு விருந்தினர்கள் மது அருந்துவதற்காக அணுகியதாகவும் ஷாகஞ்ச் வட்டாரக் காவல் அதிகாரி சுபம் தோடி குறிப்பிட்டார்.
இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இரு சகோதரர்களையும் ஆறு பேர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சகோதரர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சகோதரர்களின் உடல்கள் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து ஐந்து மணி நேரத்தில் குற்றவாளிகளைக் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அறுவரைக் கைது செய்தனர். இதனால், அறுவரில் மூவரின் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.