கிரிநகர்: பெங்களூரின் கிரிநகர் வாட்டாரத்தில் உள்ளது ஹனுமந்தநகர்.
அங்கு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இளநீர் கடைகளில், இரவு நேரத்தில் இளநீர் அடிக்கடி திருடப்பட்டது. அதுகுறித்து காவல்துறையிலும் கடை உரிமையாளர்கள் புகார் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, கிரிநகர் காவல்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாடகைக் காரை அதிகாரிகள் நிறுத்தினர். கார் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது, காரில் 90 இளநீர்கள் இருந்தன.
இரவு நேரத்தில் காரில் நகருக்குள் வலம் வந்து, இளநீர் கடைகளில் இளநீர்களைத் திருடுவதை வாடிக்கையாக வைத்துக்கொண்டதை சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் மோகன் என்றும் அவருக்கு 32 வயது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.