ஸ்ரீநகர்: காஷ்மீர் அரசாங்கம், பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக் கூறி நான்கு அரசு ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
தேசிய பாதுகாப்புக்காக இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரமுள்ளது.
ஸ்ரீநகர் எஸ்எம்ஹெச்எஸ் மருத்துமனையின் உதவி பேராசிரியர் நசீர் உல் ஹசன், காவலர் அப்துல் மஜீத் பட், உயர் கல்வி துறை ஆய்வக உதவியாளர் அப்துல் சலம் ரதேர், கல்வி துறையைச் சேர்ந்த ஆசிரியர் ஃபரூக் அகமது மிர் ஆகிய நான்கு பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அரசாங்கமும் பொது நிர்வாகத்துறையும் தனித்தனியாக வெளியிட்டுள்ள உத்தரவுகளில், கிடைக்கக் கூடிய தகவல்கள், வழக்கின் உண்மைத் தன்மைகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு துணைநிலை ஆளுநர் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவர்களின் நடவடிக்கைகள் பணியில் இருந்து நீக்குவதற்கு போதுமானதாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு, 50க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பதவிநீக்கம் செய்துள்ளது என்று ‘இந்து தமிழ் திசை’ தகவல் தெரிவித்தது.
“இவர்கள் அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகள், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதல், தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.