புதுடெல்லி: கனடா நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் காலிஸ்தான் போராளி ஹர்திப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் இந்தியாவின் உளவுத்துறை அதிகாரிகளைத் தொடர்புபடுத்தி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதைத் தொடர்ந்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதையடுத்து கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு விசா வழங்கப்பட மாட்டாது என செப்டம்பர் 21ஆம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு வரவிரும்பும் கனடா மக்களுக்கு மின்னியல் விசா (e-visa) எனப்படும் இணையவழி அனுமதி வழங்கல் முறையை இந்தியா மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த அனுமதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதை இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்பவர்கள் வரவேற்றுள்ளனர்.