சில்கியாரா: உத்தராகாண்டில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப் பாதைக்குள் மீட்புப் பணியாளர்கள் பாதி தூரம் வரை நுழைந்துவிட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை அன்று தெரிவித்தனர்.
பத்து நாள்களாக 4.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்களுக்கு பிராண வாயு, உணவு, தண்ணீர் போன்ற உயிர் வாழத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் சில நாட்களுக்கு முன்பு போடப்பட்ட குழாய் வழியாக அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் மதிப்பிடப்பட்டுள்ள அறுபது மீட்டர் தூரத்தில் 32 மீட்டர் வரை மீட்புப் பணியாளர்கள் துளையிட்டுச் சென்றுள்ளனர் என்றும் ஒருவர் தவழ்ந்து வரக்கூடிய அளவு அகலமுள்ள குழாய் ஒன்று அதில் நுழைக்கப்படும் என்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான தீபக் பட்டேல் தெரிவித்தார்.
செவ்வாய்க் கிழமை அதிகாலை தொழிலாளர்களின் முதல் படம் வெளியிடப்பட்டது. எஸ்டோஸ்கோபி கேமராவைச் செலுத்தி அவர்களின் நிலை கண்டறியப்பட்டது.
அனைவரும் யோகா, மெதுநடை ஆகியவற்றில் ஈடுபட்டு துடிப்புடன் இருந்து வருகின்றனர்.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
அங்கு கடந்த 12ஆம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 ஊழியர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி உள்ளனர். 160க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாளைக்குள் தொழிலாளர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.