சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் தரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி மெஹ்திபூர் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் ஒரு வயலில் ட்ரோன் ஒன்றை பிஎஸ்எப் வீரர்கள் நேற்று கைப்பற்றினர்.
இது குறித்து பிஎஸ்எப் அதிகாரி ஒருவர் கூறும்போது, “குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மெஹ்திபூர் கிராமத்தின் வயல் வெளியில் பஞ்சாப் மாநில காவல்துறையிருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட குவாட்காப்டர் ட்ரோன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது,” என்றார்.
பிஎஸ்எப் தனது எக்ஸ் சமூக வலைதளப்பதிவில், “கடந்த ஒரு வாரத்தில் எல்லைக்கு அப்பாலிருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 8 பாகிஸ்தானிய ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் சுமார் 5 கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 8 ட்ரோன்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. எல்லை தாண்டிய கடத்தல்கள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டவை,” என்று குறிப்பிட்டுள்ளது.