புதுடெல்லி: இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய ஊழியர்களின் முதல் படம் செவ்வாய்க்கிழமை (21-11-2023) வெளியானது.
எஸ்டோஸ்கோபி கேமரா ஒன்று திங்கட்கிழமை அமைக்கப்பட்ட குழாய் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் எடுக்கப்பட்ட ஊழியர்களின் காணொளியை மீட்பாளர்கள் வெளியிட்டனர்.
அந்தக் காணொளியில் ஊழியர்கள் மஞ்சள், வெள்ளை நிற தலைக்கவசம் அணிந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. குழாய் வழியாக அனுப்பி வைக்கப்படும் உணவுகளை அவர்கள் பெறுவதும் காணொளி காட்டியது. மீட்புப் பணியாளர்களுடன் அவர்கள் உரையாடியதால் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (21-11-2023) அதிகாலை 3.55 மணிக்கு காணொளி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சுரங்கத்தில் உள்ள 41 ஆண்களும் அடிக்கடி நடப்பது, அன்புக்குரியவர்களுடன் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர் என்று த இண்டியன் எக்ஸ்பிரஸ் தகவல் தெரிவித்தது.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
அங்கு கடந்த 12ஆம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 ஊழியர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி உள்ளனர்.
160க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்து நாள்கள் ஆன நிலையில் 41 ஆண்களும் தங்களை துடிப்புடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அதில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்களின் மனநலத்தை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டாக்டர் அபிஷேக் ஷர்மா கண்காணித்து வருகிறார்.
“நாங்கள் ஊழியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். யோகா, மெதுநடை ஆகியவற்றில் ஈடுபட யோசனை தெரிவித்துள்ளோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
சுரங்கத்திற்குள் சிக்கியவர்களில் கப்பார் சிங் நெகியும் ஒருவர். 41 ஆண்களில் அவர் ஆக வயதானவர். அவர் அனைவரையும் நம்பிக்கையோடு வைத்துள்ளார் என்று த இண்டியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
இதுவரை, அவல், கொண்டைக்கடலை மசாலா, உலர் பழங்கள் ஆகியவற்றுடன் அவர்கள் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆறு அங்குல குழாய் ஒன்று இடிபாடுகளுக்குள் திங்கட்கிழமை நுழைக்கப்பட்டது. அதன் வழியாக வாழைப்பழம், ஆப்பிள், தாலியா, கிச்சடி போன்ற உணவுகளையும் அனுப்ப நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
விரைவில் கைப்பேசி மற்றும் மின்னேற்றி சாதனங்களும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. இதனால் அவர்கள் இன்னமும் உற்சாகத்துடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டுள்ள ஊழியர்கள் அனைவரும் முழு பாதுகாப்புடன் இருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.
அனைவரையும் பாதுகாப்பாக வெளிக்கொண்டு வருவதே முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.