புதுடெல்லி: டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இருவர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தை விசாரித்த காவல்துறை, இரண்டு மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணராக காட்டிக் கொண்ட பெண், ஆய்வக ஊழியர்களை கைது செய்தது.
“டாக்டர் நீரஜ் அகர்வால், அவருடைய மனைவி பூஜா அகர்வால் மற்றும் டாக்டர் ஜஸ்பிரீத் சிங் ஆகிய மூவருடன் ஆய்வக ஊழியரான மகேந்திர சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று காவல்துறை தெரிவித்தது.
கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அஸ்கார் அலி என்பவர் மருந்தகத்தில் சேர்க்கப்பட்டார்.
டாக்டர் ஜஸ்பிரீத் சிங் இதனை மேற்கொள்வார் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அறுவை சிகிச்சைக்கு முன் ஜஸ்பிரீத் சிங்குக்கு பதில் பூஜா மற்றும் மகேந்திரா ஆகியோர் மருத்துவர்களாக மாற்றப்பட்டனர். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அஸ்காருக்கு கடுமையான வலி ஏற்பட்டு உள்ளது.
சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர் அகர்வாலும் மற்ற மூவரும் மருத்துவ நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என அஸ்காரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மேலும் போலி ஆவணங்களை கொண்டு டாக்டர் அகர்வால் அறுவை சிகிச்சைகளை செய்கிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டில் இருந்து டாக்டர் அகர்வாலுக்கு எதிராக ஒன்பது புகார்கள் எழுந்துள்ளன.
ஏழு புகார்களில் மருத்துவ அலட்சியத்தால் நோயாளிகள் ஏழு பேர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இம்மாதம் 1ஆம் தேதி நான்கு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ வாரியம் சென்று அகர்வாலின் மருத்துவ மையத்தில் ஆய்வு செய்தனர். இதில், பல குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆவணங்களை போலியாக தயாரிப்பதும் தெரிய வந்தது.
மருந்தகத்திலிருந்து தடை செய்யப்பட்ட பல மருந்துகள், ஊசிகள் கைப்பற்றப்பட்டன.
காலாவதியான மருத்துவ உபகரணங்கள், வெவ்வேறு 47 வங்கிகளின் காசோலை புத்தகங்கள், பல்வேறு வங்கிகளின் 54 ஏடிஎம் அட்டைகள், அஞ்சலகக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.