தோஹா: கத்தாரில் எட்டு இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு பரிசீலனையில் இருப்பதாகவும் இதில் நல்ல தீா்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.
கத்தாா் ராணுவத்துக்குப் பயிற்சி மற்றும் பிற சேவைகளை அளித்து வரும் ‘அல் தாரா’ என்ற தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டுப் போ், அந்நாட்டின் ரகசிய கடற்படை திட்டங்களை இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் கேப்டன் நவ்ஜீத் சிங் கில், கேப்டன் வீரேந்திர குமாா் வா்மா, கேப்டன் சௌரவ் வசிஷ்ட், கமாண்டா் அமித் நாக்பால், கமாண்டா் புரேந்து திவாரி, கமாண்டா் சுகுநாகா் பகலா, கமாண்டா் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரா் ராகேஷ் கோபகுமாா் ஆகிய எட்டுப் பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தாா் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்தத் தீா்ப்பு குறித்து அதிா்ச்சியை வெளிப்படுத்திய இந்திய வெளியுறவு அமைச்சு, கடற்படை அதிகாரிகளின் விடுதலைக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டதாக தினமணி வெளியிட்ட தகவல் கூறியது
எட்டுப் பேரின் குடும்பத்தினரை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு பரிசீலனையில் இருக்கிறது. இதில் நல்ல தீா்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை தெரிவித்தார்.
எட்டு இந்தியா்களுக்குத் தேவையான அனைத்து சட்ட, தூதரக உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.