சென்னை: தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார்.
அதன்படி 10ஆம் வகுப்புக்கு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்குகிறது. 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ல் தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
10ஆம் வகுப்புக்கு மே 10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 11ஆம் வகுப்புக்கு மே 14ஆம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 6ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுத் தேர்வுகளை அதற்கு முன்பாக நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல், உயர் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் பொதுத் தேர்வுகளைச் சிரமமின்றி எதிர்கொள்ளும் வகையில் போதிய இடைவெளி விட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்றார்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தேர்வு நடைபெறும் நாள்கள் சற்றே முன்னதாக இருந்தாலும்கூட வரும் அரையாண்டுத் தேர்வுக்குள்ளாகவே பாடத்திட்டத்தை முடித்து மாணவர்களைத் தயார்படுத்திவிடலாம் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.