லக்னோ: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த சுரங்கப்பாதை சரிந்து விபத்துக்குள்ளானது.
பாதை சரிந்து இடிபாடுகள் குறுக்கில் இருப்பதால், அவற்றின் பின்னால் 40 தொழிலாளா்கள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா். சரிவுக்குள்ளான பகுதி 30 மீட்டா் நீளமானது என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 40 பேரை மீட்கும் பணிகள் தாமதம் ஆகிவருவதாகக் கூறி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிவரும் பாதையை தயார் செய்வதற்காக இடிபாடுகளை துளையிடுவதற்கான இயந்திரங்கள் சிக்கிக்கொண்ட நிலையில், மீட்புப் படையினரிடம் வேறு மாற்றுத் திட்டங்கள்கூட இல்லை என்று போராட்டக்காரர்கள் கூறினர்.