மோட்டார் வண்டியைத் தலைக்கவசமின்றி ஓட்டிச் சென்ற காவல்துறை அதிகாரியை விடுவதாக இல்லை, இரு பெண்கள்.
சமூக ஊடகங்களில் வலம்வரும் காணொளி ஒன்றில், அந்த அதிகாரியிடம் அவரது தலைக்கவசம் பற்றி மாது ஒருவர் பலமுறை கேட்பதாக உள்ளது.
‘எக்ஸ்’ (முன்பு டுவிட்டர்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளியில் அமைதியாகத் தன் வண்டியை அந்தக் காவல் அதிகாரி ஓட்டிச் செல்வதாகவும் அவரைத் துரத்திப் பிடித்து மாது கேள்வி கேட்பதாகவும் அமைந்துள்ளது.
தம்மை நோக்கி இரு பெண்களும் என்ன கேட்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் வழிதான் கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்ட அதிகாரி, தமது வண்டியின் வேகத்தைக் குறைத்து நிறுத்தியும் விட்டதாகக் காணொளியில் தெரிகிறது.
பின்னர், அவர்களின் கேள்வியைப் புரிந்துகொண்ட பிறகு மீண்டும் வண்டியை ஓட்டிச் சென்றார் அதிகாரி.
இதேபோல் தலைக்கவசமின்றி மோட்டார்வண்டி ஓட்டிச்சென்ற இரு காவல்துறை அதிகாரிகளை இரு பெண்கள் துரத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.