குருகிராம்: மகனை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோதிக் கொன்று சம்பவ இடத்திலிருந்து சென்ற காரை தேடி அலைந்தார் தந்தை ஜித்தேந்தர் சௌத்ரி.
இதனையடுத்து, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிக்கான அவரது போராட்டத்தில் முன்னேற்றம் தெரியத் தொடங்கியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த கார் பாகங்களைக் கொண்டு காரை அடையாளம் காண, அந்தத் தந்தை முதலில் ‘மாருதி சுஸுக்கி’யை அணுகினார். நீதிமன்றத்திடம் பலமுறை அந்தத் தந்தை மனுக்கள் சமர்ப்பித்தார். அவை நிராகரிக்கப்பட்டன. அலட்சியப் போக்கு தொடர்பில் காவல்துறையினரும் கண்டிக்கப்பட்டனர். ஆனால், விசாரணையில் முன்னேற்றம் தெரியவில்லை.
இந்நிலையில், மரணம் குறித்து மீண்டும் விசாரணை தொடங்க நீதிமன்றம் காவல்துறைக்கு ஆணையிட்டது. அதையடுத்து வாகன ஓட்டுநர் கியான் சந்த் என்பவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், “ஆதாரங்கள் அழிக்கப்படும் சாத்தியத்தைக் காவல்துறையின் அலட்சியப் போக்கு ஏற்படுத்தியுள்ளது,” என்றது.
தம் மகனைக் கொன்ற நபர் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜித்தேந்தர்.