உனா: ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தலைவர் லாக்பிர் சிங் லக்கி தாக்கப்பட்டு அவரிடமிருந்து 63,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
உனா மாவட்டம் ஹரோலி பகுதியில் புதன்கிழமை மாலை இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த லாக்பிர் சிங்கை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணையைத் துவங்கியிருப்பதாக துணைக் கண்காணிப்பு ஆய்வாளர் மோகன் ராவத் தெரிவித்துள்ளார்.
லாக்பிர் சிங், அன்று தஹ்லிவால் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து, கோன்ட்பூர் ஜைசந்த்திலுள்ள தன் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது, வேறொரு வாகனம் அவரை முந்திச்சென்று அவர் வண்டியின் மீது மோதியுள்ளது.
உடனே வண்டியை நிறுத்தி யாருக்கும் அடிபட்டுவிட்டதா என அவர் பார்க்க முற்பட்டபோது, இடித்த வண்டியிலிருந்து வாள் மற்றும் இரும்புக்கம்பிகளுடன் வெளியே வந்த கும்பல், அவரைத் தாக்கி பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. .
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் உனாவில் சட்டம் ஒழுங்கு சரிவர பாதுகாக்கப்படவில்லை என உனா பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சட் பல் சட்டி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.