புதுடெல்லி: குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கை விரைந்து முடிக்கும் விதமாக அந்தந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தாமாக முன்வந்து தங்கள் தலைமையில் சிறப்பு அமர்வை உருவாக்கி விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சார்ந்த வழக்குகளை விரைந்து விசாரித்து, அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி பாஜக வழக்கறிஞர் அஷ்வினி உபதயாயா உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.