ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கரின் குஷாபாவ் தாக்ரே பரிசர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ‘மோடியின் 2023ஆம் ஆண்டு உத்தரவாதம்’ என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டார்.
திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குச் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்குப் பயணப்படி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு ஆண்டுகளில் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கை தெரிவித்துள்ளது.
தீன்தயாள் உபாத்யாய் கிரிஷி மஜ்தூர் திட்டத்தின்கீழ் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்றும் கிரிஷி உன்னதி திட்டத்தின்கீழ் விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் தலா ரூ.3,100-க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயிலைப் பார்வையிட மக்கள் அழைத்துச் செல்லப்படுவர் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பஸ்தார் பிராந்தியத்தின் 40 உட்புற கிராமங்களில் முதல்முறையாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தலைச் சந்திக்கும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் பஸ்தார் பகுதியில் உள்ளன. இந்தப் பகுதி முழுவதும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்ததால் இதன் உட்புறப் பகுதிகளில் வாக்குப்பதிவு நடத்துவது தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வந்தது. இதனால் இந்த கிராமங்களை விட்டு பல கிலோ மீட்டர் தொலைவில் பாதுகாப்பான இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
மறுபுறத்தில் மாவோயிஸ்ட் அமைப்புகள் தேர்தலைப் புறக்கணித்து வந்தன. யார் வாக்களித்தாலும் விரலை வெட்டுவோம் எனக் கிராம மக்களை இவர்கள் எச்சரித்து வந்தனர். இதனால் கிராம மக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் இப்பகுதியில் தற்போது சூழ்நிலைகள் மாறியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை இந்தப் பகுதியின் 40 உட்புற கிராமங்களில் 126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கிராமங்களில் முதல்முறையாக வாக்குப் பதிவு நடைபெற இருப்பதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.