புதுடெல்லி: மத்தியப் பிரதேசம் மாநிலத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விந்தியா ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
எனவே, அந்த மாநிலத்தில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் மற்ற கட்சிகளுடன் போட்டியிட்டு வெல்வது என்பது சிரமம் என்று கூறப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் போட்டியாக இண்டியா எனும் பெயரில் எதிர்க்கட்சியினர் மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
இதன் உறுப்பினர்களாக இந்திய தேசிய காங்கிரஸ், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங்கின் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இச்சூழலில், மத்தியபிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இங்கு கடந்த 2003 முதல் தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி செய்கிறது.
இங்கு பாஜகவை வெல்ல காங்கிரஸ் தீவிர முயற்சியில் உள்ளது. இந்த இருமுனைப் போட்டியில் காங்கிரசுக்கு சிக்கல் ஏற்படும் விதத்தில் ஏற்கெனவே, ஆம் ஆத்மி இங்கு களமிறங்கி உள்ளது. இதையடுத்து சமாஜ்வாடியும் தனது வேட்பாளர்களை களம் இறக்கத் தொடங்கியது. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் முன்வராததால் இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தன.
இதில், சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ், உ.பி.யில் மக்களவைத் தேர்தலின்போது காங்கிரசை தாம் கண்டுகொள்ளப் போவதில்லை என அறிவித்தார்.
இந்நிலையில் ம.பி.யில் தற்போது ஐக்கிய ஜனதா தளமும் 10 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த மூன்று கட்சிகளும் அதிக தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. எனினும், அக்கட்சிகள் பெறும் குறைந்த எண்ணிக்கை வாக்குகளால் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சிக்கல் உருவாகி உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.