அமராவதி: ஆந்திராவின் விசாகப்பட்டின நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பாலசாவுக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் தண்டவாளத்தில் சமிக்ஞைக்காக நின்றுகொண்டிருந்தது.
அப்போது அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசாவின் ராயகடாவுக்குச் சென்றுகொண்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் அங்கு வேகமாக வந்தது.
தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது அது மோதியது.
இதில் இரண்டு ரயில்களும் தடம்புரண்டன.
இந்த ரயில் விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த ஏறத்தாழ 39 பேர் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்துக்கு மனிதத் தவறே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.