கொச்சி: கேரளா குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையுடன் இந்தியாவின் தேசிய புலனாய்வுத்துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
கொச்சி நகருக்கு அருகில் உள்ள களமசேரியில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் மாண்டோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மாண்டவர்களில் 12 வயது சிறுமியும் அடங்குவார்.
இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக திரிச்சூர் மாவட்ட போலீஸ் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்ற நபர் சரணடைந்துள்ளார்.
இந்தக் குறிப்பிட்ட கிறிஸ்துவ சமயப் பிரிவுக்கான அமைப்பின் செயல்பாடுகளும் போதனைகளும் நாட்டுக்கு ஆபத்தானது மற்றும் இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ளதால் இந்த தாக்குதல் நடத்தியதாக டொமினிக் மார்டின் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மார்டினிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.