அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி மிசோரம் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அம்மாநிலத்தின் முதல்வர் ஜோரம்தங்கா, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் வரும் 30ஆம் தேதி அன்று மிசோரம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் பிரதமர் மோடி, தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
“மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்தபோது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் பாஜகவுடன் இணைந்து பிரசாரம் செய்வது எங்கள் கட்சிக்குப் பின்னடைவாக அமையலாம். அதனால் பிரதமர் மோடி தனியாக பரப்புரை மேற்கொள்வதும், நான் தனியாக பரப்புரை மேற்கொள்வதும் தான் சரியாக இருக்கும்,” என மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியலில் பாரதிய ஜனதா கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மிசோ தேசிய முன்னணி இயங்கி வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் தனித்து இயங்கி வருகிறது.
காங்கிரஸ் இல்லாத இடத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மிசோரம் மாநிலத்தில் மியன்மார், வங்கதேசம் மற்றும் மணிப்பூரை சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புகலிடம் தேடி தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.