புதுடெல்லி: குழந்தையைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனியாக வசித்து வந்த பெண்ணுக்கு, உள்ளூர் நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் கர்ப்பம் அடைந்த அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அந்த குழந்தை இறந்த நிலையில் குட்டை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தையைப் பெற்ற பெண் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது என்று இந்து தமிழ் திசையின் தகவல் தெரிவித்தது.
இந்தத் தண்டனையை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றமும் கடந்த 2010ஆம் ஆண்டில் உறுதி செய்தது.
இந்த நிலையில் இந்தத் தண்டனையை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, சஞ்சய் கரோல் ஆகியார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
“கிராமத்தில் தனியாக வாழ்ந்தார் என்பதை வைத்து வலுவான ஆதாரமில்லாமல் ஒரு பெண் மீது குழந்தையைக் கொன்றதாக குற்றம் சுமத்த முடியாது,” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“ஒருவரின் அந்தரங்க உரிமையை அவமதிக்கக் கூடாது,” என்றும் நீதிமன்றம் கூறியது.
“குழந்தையை அந்தப் பெண் குட்டையில் வீசினார் என்பதை நேரில் பார்த்த சாட்சி இல்லை. குழந்தை இறந்த நிலையில் பிறந்ததா என்பதிலும் மருத்துவரின் வாக்குமூலம் தெளிவாக இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்துகீழ் நீதிமன்றங்கள் சாட்டியுள்ள குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியாது. ஊகத்தின் அடிப்படையில் இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆதாரமின்றி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை தண்டனையிலிருந்து விடுவிக்கிறோம்,” என்று நீதிபதிகள் கூறினர்.