ராம்பூர்: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், அவரது மகன், மனைவிக்கு உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நீதிமன்றம் ஏழாண்டுச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
பாஜக கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் சேக்சனா என்பவர் 2019 ஜனவரி 3ஆம் தேதி ராம்பூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசம் கான் குடும்பத்தினர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம். இவர், லக்னோவில் ஒன்று, ராம்பூரில் மற்றொன்று என 2 பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் இதற்கு ஆசம் கான் மற்றும் அவரது மனைவி தசீம் பாத்திமா உதவியதாக எழுந்த புகாரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
ராம்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆசம் கான், அவரது மனைவி தசீம் பாத்திமா, மகன் அப்துல்லா ஆசம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஷோபித் பன்சால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து மூவருக்கும் அவர் ஏழாண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
உ.பி.யில் கடந்த 2017ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஆசம் கான் மீது நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் ஆசம் கான் அவரது மகன் அப்துல்ல ஆசம் ஆகியோரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.