புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது.
நாட்டில் அதிக மக்களவைத் தொகுதிகளை (80) கொண்ட மாநிலமாக உபி. உள்ளது. இங்கு ஆளும் பாஜகவிடம் மட்டும் 66 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
முக்கிய எதிர்க்கட்சியாக சமாஜ்வாடி கட்சி உள்ளது. இதில் அக்கட்சி குறிப்பிட்ட 40 தொகுதிகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு செய்துகொள்ளத் தயாராகி விட்டது. அதையடுத்து, இண்டியா கூட்டணிக் கட்சிகள் அங்கு தொகுதி உடன்பாட்டுக்குத் தயாராகி வருகின்றன.
இண்டியா கூட்டணியின் 28 கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி, தனது சொந்த மாநிலத்தில் தொகுதி உடன்பாட்டுக்குத் தயாராகி வருகிறது.
இதில் உ.பி.யில் செல்வாக்குள்ள கட்சிகளுக்கு மட்டுமே சமாஜ்வாடி தொகுதிகளை ஒதுக்கும் என கூறப்படுகிறது.
மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் உ.பி.யில் அதிக தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால், சமாஜ்வாடி கட்சியோ, காங்கிரசுக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகள் ஒதுக்க விரும்புகிறது. இதற்காக, நான்கு மாநில தேர்தலுக்கு முன்பாக உ.பி.யில் தொகுதிப் பங்கீட்டை முடிக்க விரும்புகிறது. உ.பி.யில் தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கும்படி இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி கோருகிறது.