திருவனந்தபுரம்: நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல என்று ஒரு பெண்ணுக்கு நீதிபதி ஒருவர் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2019ஆம் ஆண்டு மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில், தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள ஒரு ஆராதனைக் கூடத்தில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தியது.
ஆனால் புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதாவது விசாரிக்க சென்றபோது தங்களை தரக்குறைவாக பேசியதாக அந்த பெண் மீது காவல்துறையினர் குற்றம்சாட்டினர்.
காவல்துறையின் இந்தப் பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.வி.குஞ்சு கிருஷ்ணன் விசாரித்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் நீதிபதி முன்பு கும்பிட்டபடி நின்றார். இதைக் கண்ட நீதிபதி, “நீதியின் கோவிலாக உயர்நீதிமன்றம் உள்ள போதிலும் நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல. எனவே நீதிமன்றத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கறிஞர்கள் யாரும் நீதிபதிகள் முன் கும்பிட்டு நிற்க வேண்டியது இல்லை. கோர்ட்டு அறைக்குள் அதற்குரிய மரியாதை, கண்ணியத்துடன் நடந்து கொண்டாலே போதும்,” என்றார்.
பின்னர் பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, புகார் அளித்த பெண் தவறான வார்த்தைகளால் காவல்துறையிடம் பேசினார் என்பதை நம்ப முடியவில்லை. எனவே காவல்துறை பெண் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி பி.வி.குஞ்சு கிருஷ்ணன் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக காவல்துறை பதிவு செய்த வழக்கின் பின்னணி குறித்து விசாரணை நடத்தவும் மாவட்ட காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.