புதுடெல்லி: இந்தியாவுக்கும் தான்சானியாவுக்கும் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹசன் முன்னிலையில் அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தான்சானியா அதிபர் மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா சென்றார்.
இரு நாடுகளுக்கு இடையில் தகவல் தொழில்நுட்பம், மின்னிலக்கத் தீர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுதல், கடற்படைகளுக்கு இடையே தகவல்களை பகிர்ந்துகொள்ளுதல், கலாசார பரிமாற்றத் திட்டம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு, தான்சானியாவில் ஒரு தொழில் பூங்காவை அமைப்பது, கடல்சார் தொழில்துறை ஒத்துழைப்பு போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வளர்ச்சி, வர்த்தகம், முதலீடு போன்ற விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தங்கள் உதவும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும் தான்சானியாவும் ஒப்புக்கொண்டன.
தான்சானியாவின் முக்கியத் துறைமுகங்களில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட நீரியல் ஆய்வுகளை தான்சானியா தரப்பு பாராட்டியது.
இரு தலைவர்களும் தங்கள் ஆயுதப் படைகளுக்கு இடையிலான இருதரப்புச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டனர்.
சுற்றுலா, கடல்சார் வர்த்தகம், சேவைகள், உள்கட்டமைப்பு, கடல் அறிவியல் ஆராய்ச்சி, கடற்பரப்பு சுரங்கத் திறன், கடல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நீலப் பொருளியல் துறையில் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க தான்சானியா தரப்பு விருப்பம் தெரிவித்தது.
உள்நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
புதுடெல்லியில் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்தியாவிற்கு தான்சானியா தனது வாழ்த்துகளையும் தெரிவித்தது.