பூரி: ஒடிசா மாநிலத்தின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய ஆடைக்கட்டுப்பாட்டை கோயில் நிர்வாகம் விதித்துள்ளது. வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
இந்தக் கோயில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பழமையான இந்தக் கோயிலைக் காண்பதற்கும் வழிபடுவதற்கும் இந்தியாவில் இருந்தும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்தக் கோயில் ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரத்தின் தெற்கே அமைந்துள்ளது.
இந்நிலையில், கோயிலுக்கு வரும் வருகையாளர்களில் சிலர் அநாகரிகமான முறையில் உடையுடுத்தி வருகின்றனர். அவர்களைப் பின்பற்றி பலரும் இதுபோன்று அநாகரிகமாக கோயிலுக்கு வரக்கூடும் என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த இருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், எந்த மாதிரியான ஆடைகளை பக்தர்களும் வருகையாளர்களும் உடுத்தியிருக்க வேண்டும் என்பது குறித்து கோயில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்துப் பேசிய கோவில் நிர்வாகத் தலைவர் ரஞ்சன் குமார் தாஸ், “கோவிலின் கண்ணியத்தையும், புனிதத்தையும் காப்பது கோயில் நிர்வாகத்தின் பொறுப்பு. சிலர் மற்றவர்களின் மத உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் கோவிலுக்குள் நுழைவது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை பக்தர்களிடமும் வருகையாளர்களிடமும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
“கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், கையில்லாச் சட்டை, அரைக் கால்சட்டை அணிந்து, கடல் கடற்கரையிலோ, பூங்காவிலோ உலா வருவது போல் கோவிலில் காணப்பட்டனர். கோவில் கடவுளின் இருப்பிடம், பொழுதுபோக்கிற்கான இடம் அல்ல,” என்று ரஞ்சன் குமார் தாஸ் கூறினார்.