மும்பை: மகாராஷ்டிராவின் முல்லுண்டு பகுதியில் அண்மையில் குஜராத்தியர்கள் அதிகம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் மராட்டியப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் காட்கோபர் பகுதி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த குஜராத்தி மொழி பெயர்ப் பலகையை மகாராஷ்டிர மாநிலத்தவர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்கோபர் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் ‘மரு காட்கோபர்’ (எனது காட்கோபர்) என குஜராத்தி மொழியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அதனால் மனமுடைந்த மகாராஷ்டிர மாநிலத்தவர் சிலர் அந்த பெயர்ப் பலகையை உடைத்து நொறுக்கினர்.
மேலும், அவர்கள் அந்த இடத்தில் ஜெய் மகாராஷ்டிரா, (எனது மகாராஷ்டிரா) என மராத்திய மொழியில் பதாகை வைத்துவிட்டுச் சென்றனர். மராட்டிய மொழியிலான அந்தப் பதாகையை காவல்துறையினர் அகற்றினர். இதுமேலும் அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மாநிலத்தில் சொந்த மொழியில் வைக்கப்பட்ட பெயர்ப்பலகை காவல்துறையினரால் அகற்றப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.