திருப்பதி: தமது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா கண்ணீர் வடித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், திருப்பதியில் அமைச்சர் ரோஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் நிர்வாணப் படத்தில் நடித்ததாகக் கூறி, சித்திரவதை செய்கின்றனர். சட்டப்பேரவையிலும் அது தொடர்பாக சில காணொளிப் படங்கள் காட்டப்பட்டன.
“ஆனால், அந்தப் படங்களில் இருப்பது நான்தான் என்பது நிரூபிக்கப்படவில்லை. பெண்களை தெலுங்கு தேசம் கட்சி விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது.
“எனது புகழ், முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய்க்கு வந்தபடி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசியிருக்கிறார்.
“அவரை யாரும் கண்டிக்காதது ஏன்? ஆனால், சட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறாகப் பேசி, அரசியலைவிட்டு என்னை அப்புறப்படுத்த வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சி நினைத்தால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்,” என்று ரோஜா காட்டமாகக் கூறினார்.
இதற்கிடையில், அமைச்சர் ரோஜா குறித்த சர்ச்சை பேச்சுக்கு, தேசிய மகளிர் ஆணையம் சார்பில் ஆந்திர மாநில டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.
அதன்பேரில், தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தியை காவல்துறை கைது செய்தது.
அவர் கைது செய்யப்பட்டதற்கு ஆந்திர மாநில தெலுங்கு மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. முன்னாள் அமைச்சரை தீவிரவாதிபோல 200 காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்ததாக அந்த அமைப்பின் தலைவர் வங்கலபுடி அனிதா தெரிவித்தார்.