புதுடெல்லி: மகாத்மா காந்தி பிறந்த நாள் கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறை என்பதால் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடினர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் செவ்வாய்க்கிழமை பொற்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின்னர் பக்தர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் உணவுக் கூடத்துக்குச் சென்றார். அங்கு பாத்திரங்களைச் சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த தொண்டூழியர்களுடன் ராகுல் காந்தியும் சேர்ந்து வேலை பார்த்தார். இந்தக் காட்சிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ராகுல் காந்தியின் பஞ்சாப் வருகை அவரது தனிப்பட்ட ஆன்மிகப் பயணம் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.