மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இப்போது மேலும் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் குழந்தைகள்.
செப்டம்பர் 30ம் முதல் அக்டோபர் 1 வரை பிறந்து 3 நாட்களுக்குள் 12 குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனையின் தலைவர் ஷியாம் ராவ் வகோடே கூறியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கவலை தெரிவித்துள்ளார். இது பெரிய வலியையும் வேதனையையும் கவலையையும் தந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தானே நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. குறுகிய காலத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்தார்.