புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
எந்தவொரு அடிப்படை ஆதாரமோ வாரண்டோ இல்லாமல் சோதனை நடத்தப்பட்டதாக செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் செய்தியாளர்கள் வீடுகள் உள்பட 30க்கு மேற்பட்ட இடங்களில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.
இதுகுறித்து நியூஸ்கிளிக் ஊடக நிறுவனத்தின் மூத்த செய்திளார் அபிஷர் சர்மா, “என் வீட்டில் டெல்லி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது எனது கைப்பேசி, கையடக்கக் கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நியூஸ்கிளிக் இணையத்தில் விவாத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நெறியாளரும் செய்தியாளருமான பாஷா சிங் என்பவர், எக்ஸ் பதிவில், “டெல்லி காவல்துறை எனது கைப்பேசியைக் கைப்பற்றிக் கொண்டனர். எனது கைப்பேசியில் பதிவிடும் கடைசி எக்ஸ் பதிவு இதுதான் என்று பதிவிட்டுள்ளார்.
நியூஸ்கிளிக் இணையத்தளத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி உதவி அளிப்பதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்த செய்தி ஒன்றை அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிலர் குறிப்பிட்டிருந்ததை செய்தியாளர் பாஷா சிங் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க செல்வந்தர் நெவைல் ராய் சிங்கம் என்பவர் நிதியுதவி செய்கிறார். இவருக்கு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உண்டு. மேலும் இவருக்கு சீன ஆதரவு ஊடக நிறுவனங்களுடன் அணுக்கமான தொடர்பு உள்ளது,” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான துஷ்யந்த் குமார் கௌதம், “நியூஸ்கிளிக் நிறுவனம் மற்றும் வெளிநாடுகளில் நிதிபெற்று, இந்திய நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லி காவல்துறை நியூஸ்கிளிக் நிறுவனத்தின் செய்தியாளர் பரஞ்சாய் குஹா தக்குர்த்தா, ஊர்மிலேஷ் ஆகியோரை அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சோதனை நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரான குர்தீப் சப்பால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்த நடவடிக்கை ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை குறித்த எச்சரிக்கை மட்டுமல்ல, இது பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் அரசியல் தத்துவத்தின் வெளிப்பாடு,” என்று திரு சப்பால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில்,டெல்லியில் தனியார் ஊடக நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் டெல்லி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.