புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, இந்திய அதிபர் திரவுபதி முர்மு ஞாயிற்றுக்கிழமையன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை பி.ஆர்.அம்பேத்கரின் சிலையைத் திறந்துவைத்தார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்தியச் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் அந்த ஏழடி உயர அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி, புகழஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, அதிபரும் தலைமை நீதிபதியும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் பங்கேற்றனர்.
திரு அம்பேத்கர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அரசியலமைப்புச் சட்டத்தை 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனை நினைவுகூரும் வகையில் கடந்த 2015 முதல் நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. முன்னதாக இந்த நாள் சட்ட நாளாகக் கொண்டாடப்பட்டது.