தமிழ்நாட்டின் ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ் குமார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் (யுஏஇ) ஃபாஸ்ட்5 அதிர்ஷ்டக் குலுக்கலின் மாபெரும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, 25 ஆண்டுகளுக்கு மாதம் 25,000 திர்ஹம் (S$9,350, ரூ.566,000) அவருக்கு வழங்கப்படும். ஒட்டுமொத்தத்தில், 25 ஆண்டுகளில் 7.5 மில்லியன் திர்ஹம் அவருக்குக் கிடைக்கும்.
இந்தக் குலுக்கலின் முதலாவது அனைத்துலக மாபெரும் வெற்றியாளர் அவர்தான்! அத்துடன், யுஏஇக்கு வெளியே இருந்தபடி இந்தப் பெரும்பரிசைத் தட்டிச் சென்ற முதல் ஆளும் அவரே!
“கைப்பேசிச் செயலி வழியாக முடிவைப் பார்த்தபோது நான் வாங்கிய ஐந்து எண்களுமே பொருந்தியிருந்தன. என்னால் இதனை நம்பவே முடியவில்லை. ‘எமிரேட்ஸ் டிரா’விடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபிறகே நம்பினேன்,” என்றார் 49 வயது மகேஷ்.
அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றிபெற்ற நாள், தன் வாழ்வின் மகிழ்ச்சியான, மறக்க முடியாத நாள்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
திட்ட மேலாளரான மகேஷ், கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டுத் தொடக்கம்வரை சவூதி அரேபியாவில் பணியாற்றினார்.
அக்காலகட்டத்தில் துபாய் சென்றிருந்தபோது அங்கு நடத்தப்படும் அதிர்ஷ்டக் குலுக்கல் குறித்து அவர் அறிந்தார். அதனையடுத்து, ஒருநாள் பரிசு வெல்வோம் என்ற நம்பிக்கையில், அவரும் அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்கத் தொடங்கினார்.
“எனக்குக் கிடைக்கும் பரிசுப்பணத்தின்மூலம், சமூகத்திற்கும் உதவி தேவைப்படுவோர்க்கும் கைகொடுக்க முன்னுரிமை அளிப்பேன்,” என்றார், இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான மகேஷ்.
அத்துடன், அப்பணத்தைத் தன் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும் பயன்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உண்மையிலேயே தான் அதிர்ஷ்டசாலிதான் என்ற மகேஷ், தான் வாங்கிய ஒவ்வொரு பரிசுச்சீட்டும் அர்த்தமுள்ளதாகவும் சமூகத்திற்குப் பங்களிப்பதாகவும் இருந்தது என்றும் நம்புகிறார்.
“பவளப்பாறை மீட்டெடுப்புத் திட்டத்திற்காக இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்படுவதைப் பாராட்டுகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.