மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் (ஔரங்கபாத்) மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.250 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அங்குள்ள இரு தொழிற்சாலைகளிலும் குடியிருப்பு வளாகங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்பில் முக்கியச் சதிகாரர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சோதனைகளின்போது, ஒரு வீட்டிலிருந்து 23 கிலோ கொக்கைன், 2.9 கிலோ மெஃபெட்ரோன், ரூ.23 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அங்குள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து 4.5 கிலோ மெஃபெட்ரோன், 4.3 கிலோ கேட்டமின், மெஃபெட்ரோன் கலந்த இன்னொரு போதைப்பொருள் 9.3 கிலோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அண்மையில் ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை மும்பைக் காவல்துறை கைப்பற்றிய நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது.
அதன் தொடர்பில் கைதாகியுள்ள லலித் பட்டேல் என்பவருக்கு முக்கிய அரசியல்வாதிகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக பேரளவில் போதைப்பொருள் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.