புதுடெல்லி: மளிகைப்பொருள்களை விநியோகிக்கச் சென்ற ஆடவர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியாவின் நொய்டாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் அப்பெண், கைப்பேசிச் செயலி வழியாக மளிகைப்பொருள்களுக்குப் பணிப்பு (order) செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சுமித் சிங், 23, என்ற ஆடவர் அப்பெண்ணின் வீட்டிற்குப் பொருள்களை விநியோகிக்கச் சென்றார். வீட்டில் அப்பெண் தனியாக இருப்பதை அறிந்த சுமித், அவ்வீட்டிற்குள் புகுந்து அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
பின்னர் சுமித் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தனக்கு நேர்ந்த அவலம் குறித்து அப்பெண் காவல்துறையில் புகாரளித்தார்.
அதனையடுத்து, காவல்துறை பல குழுக்களை அமைத்து, சுமித்தைத் தேடியது. இறுதியில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பில் அவர் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமித்தைக் கைதுசெய்ய காவல்துறை அங்கு விரைந்தது. ஆனால், எப்படியோ காவலர்களில் ஒருவரின் கைத்துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு, அவர் அங்கிருந்து தப்பியோடினார்.
அதனைத் தொடர்ந்து, சுமித்தைத் தேடும் பணியில் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் குழுவின் உதவி நாடப்பட்டது.
காவல்துறையினர் தன்னை நெருங்கியதும் சுமித் அவர்களை நோக்கிச் சுட்டார். பதிலுக்குக் காவல்துறையினரும் சுட, சுமித்தின் காலில் குண்டு பாய்ந்தது.
பின்னர் காவல்துறை அவரைக் கைதுசெய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தது.
சட்டவிரோதமாக மது விற்றதற்காக ஏற்கெனவே ஒருமுறை சுமித் கைதானதாக என்டிடிவி செய்தி தெரிவித்தது.