புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த 37 வயது விமானி ஒருவருக்கு 16ஆம் தேதி வியாழக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
அங்கேயே அவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆயினும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்விமானி தீபாவளி விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமைதான் வேலைக்குத் திரும்பினார். அன்றைய நாள் அவர் விமானத்தை இயக்காதபோதும் இன்னொரு வகை விமானத்திற்கு மாறுவதற்குப் பயிற்சி பெறுவதற்காக அவர் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்தார்.
ஹிமானில் குமார் என்ற அவரின் உடல்நிலை நன்றாக இருந்தது என்று முந்திய மருத்துவப் பரிசோதனை முடிவுகள் காட்டின என்றும் அவருக்கு வேறு எந்த உடல்நலக் கோளாறுகளும் இல்லை என்றும் விமானப் போக்குவரத்து இயக்கக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஹிமானில் குமார் மாரடைப்பால் இறந்ததாக அவரது அவசரநிலை மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இண்டிகோ விமானி ஒருவர் விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருந்தபோது நாக்பூர் விமான நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்துபோனார். அதற்கு முதல்நாள்தான், ஸ்பைஸ்ஜெட் விமானி ஒருவர், டெல்லி - தோஹா விமானத்தில் பயணியாகச் சென்றபோது நடுவழியிலேயே இறந்துவிட்டார்.