லக்னோ: கல்வி கற்க வயது தடையன்று என்பதை மெய்ப்பித்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர்.
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாகர் மாவட்டம், சாவ்லி என்னும் சிற்றூரைச் சேர்ந்த சலீமா கான் என்ற அம்மூதாட்டி, எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ளும் ஆவலில் அங்குள்ள தொடக்கப் பள்ளிக்குச் சென்று வருகிறார்.
பல்லில்லாத அப்பாட்டி, நாளும் தம் பேத்தி ஃபிர்தவுசுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்று வருகிறார்.
கடந்த ஆறு மாதங்களாகப் பள்ளிக்குச் சென்றுவரும் திருவாட்டி சலீமா, இப்போது எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டார்.
“இப்போது என்னால் கையெழுத்து போட முடியும். அது மிகவும் முக்கியம்,” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் அம்மூதாட்டி.
திருவாட்டி சலீமா சென்றுவரும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை பிரதீபா சர்மா கூறுகையில், “எட்டு மாதங்களுக்குமுன் இங்கு வந்த அவர், தம்மையும் வகுப்பில் அமர அனுமதிக்கும்படி கேட்டார். முதியவர்க்குப் பாடம் கற்றுத் தருவது கடினம் என்பதால் முதலில் தயங்கினோம். ஆனாலும், தமது கடைசிக் காலத்திலும் அவருக்கு இருந்த ஆர்வம் எங்கள் மனத்தை மாற்றியது. அவருக்கு மறுப்பு தெரிவிக்க எங்களால் முடியவில்லை,” என்றார்.
கல்வியின்மீது திருவாட்டி சலீமா கொண்டுள்ள ஆர்வத்தைக் கொண்டு, அவருடைய மருமகள்கள் இருவர் உட்பட, அவ்வூரைச் சேர்ந்த மேலும் 25 பெண்கள் இப்போது வகுப்பில் சேர முன்வந்துள்ளனர்.
இதனால், அவர்களுக்காக இப்போது தனி வகுப்பு தொடங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார் திருவாட்டி பிரதீபா.
அப்போதெல்லாம் தம் ஊரில் பள்ளிகள் இல்லை என்ற திருவாட்டி சலீமாவிற்கு 14 வயதில் திருமணமாகிவிட்டது.
முதல்நாள் பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியை கொடுத்த புத்தகத்தைப் பிடித்தபோது தம் கைகள் நடுங்கின என்றும் பேனாவை எப்படிப் பிடிப்பது என்றே தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் சொன்னார்.
ஆனாலும், ‘கான் சாச்சி’ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர், கற்க வயதில்லை என்பதிலும் இப்போதில்லை எனில் எப்போதும் முடியாது என்பதிலும் திடமான நம்பிக்கை கொண்டுள்ளார்.